10 Apr 2012

எச்சரிக்கை - இது ஒரு துப்பறியும் கதை அல்ல

"நானே எழுந்து விட்டேன் உனக்கென்ன இன்னும் தூக்கம்" என்பது போல் என் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது இளஞ்சூரியனின் வெப்பம். செல்போனை எடுத்தேன். அதில் மணி தெரிகின்றதோ இல்லையோ அவளின் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு மட்டும் தவறாமல் தெரியும். 

காலை நான் எழுவதற்கு முன்பே எழுந்து, இரவில் என்னை உறங்க வைத்துவிட்டுப் பின் உறங்கும் ஒரே ஜீவராசி அவளாகத் தான் இருக்கும். என் கனவில் அவள் வந்தாளா இல்லையா என்ற விசாரணையில் இருந்து தான் என் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டுள்ளது. அந்த அளவிற்கு என்னைக் காதலிக்கிறாள்.

காதல் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா? தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரியும், நான் இல்லாமல் அவள் கடிகாரம் கூட அடுத்த நொடியைக் காட்டாது.

அவள் அனுப்பிய குறுந் தகவலைப் படித்தேன் " ஹாய் டா குட் மார்னிங் . உன் கூட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், உடனே போன் பண்ணு."முக்கியமான விஷயம் என்பதற்கு அவளது அகராதியில் வேறு பெயர் ஒன்றுக்கும் உதவாத மேட்டர் என்பதே.   

முக்கியமான விஷயம் என்று போன் செய்தால் "இன்னிக்கு என்ன கலர் டிரஸ் போட்ருக்க, இன்னிக்கு வெள்ளிகிழமை இந்த கலர் போடு" என்று சொல்லி விட்டு வைத்துவிடுவாள். அவளுக்கு எப்போதாவது நியாபகம் வந்தால் " போனவாரம் என்ன பொண்ணு பார்க்க வந்தாங்க" என்று சொல்லுவாள். "ஏன் இதை முன்னமே சொல்லவில்லை" என்று கேட்டால் " இது என்ன அவ்ளோ முக்கியமான விஷயமா" என்பாள். பெண்பாலை புரிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது ஒவ்வொரு ஆண்பாலுக்கும் தெரியும். 

நான்கு வருடங்களுக்கு முன்பு காதலை முதலில் வெளிப்படுத்தியது நான் தான். எவ்விதமான மறுப்போ போராட்டமோ செய்யாமல் ஏற்றுக்கொண்டாள். காதலிக்க ஆரம்பித்த நான்காவது வாரமே " நம் கல்யாணம் எப்போ?" என்றவளிடம் வேலைக்குச் சென்றதும்" என்றேன். அன்றிலிருந்து படிப்பை விட வேலையை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள். ஆனால் விதியோ வேறு விதமாக யோசித்தது. 

படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்கவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் படித்த படிப்பிற்க்கான வேலை கிடைக்கவில்லை. வேறு வழியே இல்லாமல் ஒரு சிறு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். படிப்பிற்கும் வேலைக்கும், வேலைக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லாத வேலை அது. 

வேலையில் சேர்ந்து விட்டேன் ஆனால் மாதம் வெறும் ஐந்தாயிரம் தான் சம்பளம் என்ற என்னிடம்  "ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். எப்போ எங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேக்கபோற" என்றாள் மனசாட்சியே இல்லாமல். தன் வீட்டு கார் டிரைவருக்கே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் நான் என்ன சொல்லி பெண் கேட்பேன். 

"நல்ல வேலை கிடைக்கட்டும்" என்றேன். கோபப்பட்டு ஒரு மணி நேரம் பேசாமல் இருந்தாள். விசித்திரமானவள். அவள் கோபம் கலைய 60 வினாடிகளிலிருந்து 60 நிமிடங்கள் போதும். நல்ல வேலை கிடைக்க ஒரு வருடத்திற்கும் மேலானது. அதுவரை வேலை பார்த்து வந்த அலுவலக எம்.டி.க்கோ என்னை விட மனமில்லை. இருந்தும் படிப்பிற்கேத்த வேலை, கை நிறைய சம்பளம் என்றதும் உற்சாகத்துடன் விடை கொடுத்தார். 

என்னவளிடம் கூறினேன். என்ன பதிலுரைத்திருப்பாள் என்பது உங்களுக்கே தெரியும். அதையே தான் கூறினாள். ஆனால் இம்முறை சற்று பிடிவாதமாகவே கூறிவிட்டாள். " இந்த மாதத்திற்குள் என் அப்பாவிடம் நீ பேச வேண்டும்" என்று. எனக்கும் வேறு வழி இல்லாததால் சரி என்று கூறிவிட்டேன். அவள் வீட்டில் பேசுவதற்கு முன் என் வீட்டில் சொல்ல வேண்டுமே . சொன்னேன். பயங்கர கோபத்துடன் சிறிது சந்தோசத்தையும் கலந்து சரி என்றார்கள்.

அவள் அப்பாவிடம் பேசுவதற்க்கான நாளையும் அவளே குறித்துக்  கொடுத்தாள். என்ன சொல்வரோ என்ற பயத்திலேயே அவள் வீட்டினுள் நுழைந்தேன். வீடு எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாக இருந்தார் அவள் அப்பா. இவரைக் கூட சமாளித்து விடலாம், ஆனால் வெடித்து விடுவது போல் துடித்துக் கொண்டிருந்த என் இதயத் துடிப்பை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அகோரப் பசி கொண்ட முயல் சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்தேன். 

என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் அவளை அந்த வீட்டு இளவரசியை பார்த்தேன். எனக்கு உதவுவற்காக "அப்பா"  என்றாள். ஒரு விரலை உயர்த்தி அவள் வார்த்தைகளை வார்த்தையாக்க விடாமலேயே தடுத்து நிறுத்திவிட்டார். அவர் என்னைப் பார்த்த பார்வை ஏளனமாக இல்லை என்றாலும் என்னை அவர்  ஏளனமாகப் பார்ப்பது போலவே எனக்குத் தோன்றியது.  

எடுத்த எடுப்பிலேயே கூறினார் " என்னக்கு எல்லாமே தெரியும் தம்பி! நீங்க ரெண்டு பேரும் நாலு வருசமா லவ் பண்றீங்கன்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வாரத்துல நானே உங்கள கூப்பிட்டு பேசலாம்னு இருந்தேன்.ஆனா நீங்க முந்திட்டீங்க. ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க, என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கறதா வேணாம்னு சொல்லறேன்" என்றார். என்னை எதுவுமே பேச விடவில்லை அந்த இடத்தில இருக்கவும் விடவில்லை.மனம் நிறைய கேள்விகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். 

வெளியில் வந்ததுமே அவளுக்கு போன செய்தேன். " உங்க அப்பாகிட்ட நம்ம விசயத்த சொல்லிட்டதா என்கிட்ட சொல்லவே இல்ல" என்றேன். அவளோ " இல்ல நான் சொல்லவே இல்ல. எப்படி தெரிஞ்சதுன்னு எனக்கும் தெரியல" என்றாள். அவளும் தன் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தாள். 

நாம் செய்யும் பல விஷயங்கள் பிறருக்குத் தெரிவதில்லை என்று நாம் நினைக்கின்றோம், ஆனால் அவர்கள் தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொள்கிறார்கள் என்பது தான் நமக்குத் தெரிவதில்லை. இன்று தான் அவள் அப்பா தன் முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியிருந்த நாள். அவள் என்னிடம் பேச வேண்டும் என்று கூறியிருந்த முக்கியமான விசயமும் அது பற்றியாகத் தான் இருக்க வேண்டும். ஏதேதோ எண்ணி கொண்டிருக்கும் போதே அவளிடமிருந்து போன் வந்தது. போனை உயிர்ப்பித்தேன்.

"என்ன முக்கியமான விஷயம்" என்றேன்.

" நீ வெளியூர் பையன்றதால உன்ன பத்தி விசாரிக்க அப்பா ஒரு டிடெக்டிவ்ட போயிருக்காரு, இன்னிக்கு அந்த டிடெக்டிவ் கொடுக்கப் போற கேரக்டர் ரிப்போர்ட் வச்சு தான் நமக்கு கல்யாணம் நடக்குமா இல்லையான்னு தெரியும்.  மவன ஏதாது தப்பான ரிப்போர்ட் மட்டும் வந்தது அவ்வளோ தான். நான் ஜெயிலுக்கு போகனுமா வேண்டாமான்னு நீ தான் முடிவு பண்ணனும் சொல்லிட்டேன்."  இன்னும் எப்படி எல்லாம் மிரட்ட முடியுமோ மிரட்டிவிட்டு போனை வைத்து விட்டாள். 

ஏற்கனவே இருக்கின்ற குழப்பம் போதாதென்று புதிதாக வேறுஒரு குழப்பம் . மீண்டும் செல்போன் சிணுங்கவே எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தேன், இதற்க்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் எம் டி தான் அழைத்தார். அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையுடன் பேச ஆரம்பித்தேன். 

வழக்கமான விசாரணைகளுக்குப் பின் "என்ன கிருஷ்ணா லவ் லாம் பண்ற போல கல்யாணம் வேற பிக்ஸ் ஆகப் போகுது என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்ட்டியே" என்று இவரும் தான் பங்கிற்கு புதிர் போட ஆரம்பித்தார். 

" லவ் பண்றது உண்மை தான் சார் ஆனா இன்னும் கல்யாணம் பிக்ஸ் ஆகல, ஆகுமான்னே தெரியல" என்றேன் விரக்தியுடன்.

" கொஞ்சம் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா கிருஷ்ணா" என்றார். 

" கண்டிப்பா வரேன் சார். ஏன் ஏதும் விசேஷமா" என்றேன் ஆவலுடன்.

" எல்லாம் உன் கல்யாண விசயமாத்தான். உங்க மாமனார்கிட்ட இன்னிக்குதான் கேரக்டர் ரிப்போர்ட் சப்மிட் பண்ண போறேன் அப்போ நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும், அதான் உன்னையும் கூப்டறேன். எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு நேர்ல வா மீட் பண்ணலாம்" என்று ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து விட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டார் சென்னையின் மிகப் பிரபலமான துப்பறியும் நிபுணர் திரு மணிவண்ணன். 

11 comments:

  1. great machi.. unnoda inspiration yaaru,,, really superb....
    "காதல் பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? இல்லை பைத்தியத்தின் முடிவு நிலை காதலா? தெரியவில்லை"
    intha varigal mattum engo vaasithu maranthathu pol ullathu... great work.. all the best... continue.. wish u all the success! neraya ezhuthu unakendru oru nadayai pinpatru... god bless u..
    - Ananth deepam

    ReplyDelete
  2. I like the way of story telling.. it is like water beads plopped into the glass of water... I thought this how story will end up but only after reading :-).. All the best... keep going....

    ReplyDelete
  3. Enna boss !! personal experience ah?

    ReplyDelete
  4. "அகோரப் பசி கொண்ட முயல் சிங்கத்திடம் சிக்கிக் கொண்டது போல பவ்யமாக அவர் முன்னால் அமர்ந்தேன்."
    கதையை விட நிறைய வசனங்கள் பட்டையை கிளப்புது...இணைந்திருப்போம்.

    ReplyDelete
  5. http://tamilmottu.blogspot.in/2012/04/blog-post_11.htmlநேரம் இருந்தா பாருங்க

    ReplyDelete
  6. Unna vachi naan oru kathai pannamala pogaporaen...? appo irukku thambi...

    ReplyDelete
  7. "முக்கியமான விஷயம் என்பதற்கு அவளது அகராதியில் வேறு பெயர் ஒன்றுக்கும் உதவாத மேட்டர் என்பதே.
    Super punch thala...
    konjam munnadi solli iruntha OKOK la santhanam use senji iruparu.. :)

    பெண்பாலை புரிந்து கொள்வது எவ்வளவு கஷ்டம்
    Aama aama romba kashtam paduriga pola.... ;)

    Story super...

    i'm telling you to send it to some newspaper or magazine ana kayka matriga...

    ReplyDelete
  8. குறும்படத்தை
    நினைவுக்குள் நிழல் பிடித்த உணர்வு !!!

    ReplyDelete
  9. நல்ல கதை. முடிவு வித்யாசமாக இருந்தது. பாராட்டுக்கள். வேறு க்ளைமாக்ஸ் வைத்தால் இன்னும் பெட்டராக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி ஐயா.சுபமாக முடிக்க ஆசை அதனால் தான் இப்படி . வருகைக்கு நன்றி. இணைந்திருப்போம்

      Delete
  10. நன்றாக இருந்தது, ஆனால் முடிவு ஈர்க்கக்கூடியதாக இல்லை. நன்றி.

    ReplyDelete